ஞானப்பிரகாசம் கிஷோர், யாழ்.மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இடைக்கால தடையுத்தரவு மனு, ஆட்சேபனை தெரிவிக்க சந்தர்ப்பம் வழங்கி ஒத்திவைப்பு!

சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் பதவி மற்றும் நகரசபை உறுப்புரிமையிலிருந்து தன்னை நீக்கி வட மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யக் கோரியும்,

அதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரியும், ஞானப்பிரகாசம் கிஷோர், யாழ்.மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில்,

எதிர் மனுதாரர்கள் ஆட்சேபனைகளைத் தெரிவிக்க சந்தர்ப்பம் வழங்கி வழக்கை எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு யாழ்.மேல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

கடந்த தவணையில், முறையீட்டு மனுவை ஆராய்ந்த யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி எஸ்.சதீஸ்தரன், இடைக்காலத் தடைக்கட்டளையை வழங்க மறுத்திருந்தார்.

இருந்தபோதிலும், எதிர்மனுதாரர்களான வட மாகாண ஆளுநர், உள்ளூராட்சி ஆணையாளர், தனிநபர் விசாரணை அதிகாரி ஆகியோருக்கு அறிவித்தல் அனுப்ப அனுமதியளித்திருந்தார்.

இந்த நிலையில் மனு மீதான இன்றைய விசாரணைகளின் பின்னர் எதிர் மனுதாரங்கள் ஆட்சேபங்களை தெரிவிக்க சந்தர்ப்பம் வழங்கி வழக்கை எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு நீதிபதி எஸ்.சதீஸ்தரன் ஒத்திவைத்துள்ளார்.

மனுதாரர் சார்பாக சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் ஆஜராகியிருந்தார்.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version