பெர்லின் மரதன் போட்டியில் இருந்து செபஸ்டியன் சாவே விலகல்

இரண்டு மணி நேரத்திற்குள் மரதன் ஓட்டத்தை நிறைவு செய்த உலக சாதனை வீரரான செபஸ்டியன் சாவே, காயம் காரணமாக அடுத்த மாதம் நடைபெறவுள்ள பெர்லின் மரதன் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

பெர்லின் மரதன் போட்டி எதிர்வரும் செப்டம்பர் 27ஆம் திகதி நடைபெறவுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற லண்டன் மரதன் போட்டியில், ஒரு மணி 59 நிமிடங்கள் 30 விநாடிகளில் இலக்கைக் கடந்து சாவே உலக சாதனை படைத்திருந்தார்.

அதன் பின்னர் அவர் பங்கேற்கவிருந்த முதல் போட்டியாக பெர்லின் மரதன் அமைந்திருந்தது.

எனினும், காயம் காரணமாக போட்டியில் இருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக 31 வயதான கென்ய வீரர் செபஸ்டியன் சாவே தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு பெர்லின் மரதனில் கடும் வெப்பத்தையும் தாண்டி, 2 மணி 02 நிமிடங்கள் 16 விநாடிகளில் இலக்கைக் கடந்து சாவே வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version