அல்லைப்பிட்டி–மண்கும்பான் இடையே புற்றரைக்கு தீவைத்தவர் ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைப்பு!

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பிரதான வீதியின் அல்லைப்பிட்டி–மண்கும்பான் இடையே புற்றரைக்கு தீவைத்ததாகக் கூறப்படும் ஒருவர் பிடிக்கப்பட்டு ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று(31) இடம்பெற்றதாக வேலணை பிரதேச சபையின் தவிசாளர் சி. அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட வயல்வெளிகள் மற்றும் கால்நடைகள் மேய்ச்சலுக்குப் பயன்படுத்தப்படும் புற்றரைகள் உள்ளிட்ட பகுதிகளுக்கு நீண்டகாலமாக இனந்தெரியாத நபர்கள் தீவைத்து வருவதால் பல்வேறு அசௌகரியங்கள் உருவாகி இருந்தன.

இதனால், பரந்தளவிலான நிலப்பரப்புகள் அடிக்கடி தீக்கிரையாவதுடன், புகை மற்றும் தீ பரவல் காரணமாக பொதுப் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் பெரும் அசௌகரியங்கள் ஏற்பட்டு வந்துள்ளன.

புற்றரைகளுக்கு தீவைக்கும் சம்பவங்களின் பின்னணியில் உள்ளவர்களை இதுவரை அடையாளம் காணவோ கைது செய்யவோ முடியாத நிலையில், வேலணை பிரதேச சபை நெருக்கடியை எதிர்கொண்டிருந்தது.

இந்நிலையில், இன்று ஒருவர் தீவைத்துக் கொண்டிருந்தபோது கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஊர்காவற்றுறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version