யாழில் களவாடப்பட்ட ஒருகோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மீட்பு!

யாழ் குடாநாட்டில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகை திருட்டில் ஈடுபட்டு வந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு ஒருகோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான 43 பவுண் தங்க நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த மாதம் ஒன்பதாம் திகதி சாவகச்சேரி நகரிலுள்ள நகைக் கடை உரிமையாளரின் வீட்டில் இருந்து 17 பவுண் தங்க நகைகள் களவாடப்பட்டிருந்தன.

அதனைத் தொடர்ந்து சிசிடிவி காணொளியின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், யாழ் நகரில் வைத்து நவாலியைச் சேர்ந்த பிரதான சந்தேக நபர் நேற்றைய தினம்(22) கைது செய்யப்பட்டார்.

பிரதான சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், குறித்த நபர் கோப்பாய் பிரதேசத்தில் மூன்று இடங்களிலும், வட்டுக்கோட்டை பிரதேசத்திலும், சாவகச்சேரி பிரதேசத்திலுமாக ஐந்து வீடுகளில் தங்க நகை திருடியமை தெரிய வந்தது.

மேலும் ஊர்காவற்றுறையிலுள்ள வங்கி ஒன்றில் 43 பவுண் தங்க நகைகள் அடகு வைக்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டது.

அத்துடன் அடகு வைத்த பணத்திலிருந்து குறித்த சந்தேக நபர் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் கொள்வனவு செய்துள்ளார்.

இந்தநிலையில் சந்தேக நபருக்கு உதவிய ஊர்காவற்றுறையைச் சேர்ந்த பெண் ஒருவரையும், நவாலியைச் சேர்ந்த ஆண் ஒருவரையும் கைது செய்துள்ள சாவகச்சேரி பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version