சிறைக்குள் போதைப்பொருள் சொல்லாமையே மோதலுக்கான முக்கிய காரணம்: நீதி அமைச்சர் தெரிவிப்பு!

மஹர சிறையில் இடம்பெற்ற அமைதியின்மை, நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையிலேயே மோதல்கள் இடம்பெற்றது எனவும், ஆனால் மஹர சிறைச்சாலையில் கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையிலேயே மோதல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் எனவும் அவர் கூறினார்.
சிறைச்சாலைகளுக்கு வெளியேயுள்ள சில தரப்பினர் திட்டமிட்ட முறையில் இவ்வாறான கலவரங்களைத் தூண்டிவிடுகிறார்களா என்ற பலமான சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் இவ்வாறான சம்பவங்கள் தற்செயலாக நடப்பதில்லை. இதன் பின்னணியிலுள்ள வெளிநபர்களின் தலையீடுகள் குறித்து தீவிர விசாரணைகள் நடத்தப்படும்.
அரசாங்கம் போதைப்பொருளுக்கு எதிராக முன்னெடுத்து வரும் தீவிர நடவடிக்கைகளின் காரணமாக, சிறைச்சாலைகளுக்குள் செல்லும் போதைப்பொருளின் அளவு பெருமளவில் குறைவடைந்துள்ளது.
இதுவே சிறைச்சாலைகளில் மோதல்கள் உருவாவதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்திருக்கக்கூடும்.
அதேநேரம், சிறைச்சாலைகளில் காணப்படும் அளவுக்கு அதிகமான நெரிசலும் இத்தகைய அசம்பாவிதங்களுக்கு ஒரு காரணமாக அமைவதாகவும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.




