
யாழ்ப்பாணம் – வலி வடக்கில் மயிலிட்டிப் பகுதியிலுள்ள தமது காணிகளை
விடுவிக்கக்கோரி காணி உரிமையாளர்கள் மேற்கொண்டுவரும் போராட்டம் 7 ஆவது வெள்ளிக்கிழமையாக இன்றும் (05) இடம்பெற்றது.
காங்கேசன்துறை – தொண்டைமானாறு வீதியின் அருகிலுள்ள இராணுவத்தின் “கொமோண்டோ” பங்களா முன்பாக இந்தப் போராட்டம் இடம்பெற்றது.
தமது காணிகளை விடுவிக்க வலியுறுத்தி காணி உரிமையாளர்கள் மேற்கொண்டுவரும் இந்த தொடர் போராட்டத்தில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
1990 ஆம் ஆண்டு ஜூன் மாத காலப்பகுதியில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கை காரணமாக
வலி. வடக்கின் 248, 249, 251, 255, 256
ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் இடம்பெயர்ந்தனர்.
தற்போது யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும், அப்பகுதிகளில் இருந்து இராணுவத்தினர் வெளியேறாத நிலையில்,அந்த இடங்கள் உயர்பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது.
இந்த நிலையில் தமது 651 ஏக்கர் வரையிலான காணிகளை விடுவிக்குமாறுகோரி காணி உரிமையாளர்கள் பல வருடங்களாக போராடி வரும் நிலையிலும் காணிகள் விடுவிக்கப்படவில்லை.
அதனால் காணி உரிமையாளர்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி ஒவ்வொரு வெள்ளிக் கிழமைகளிலும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




