
மேன்முறையீட்டு நீதிமன்றம், உயர் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பதற்கு அமைச்சரவையின் அனுமதி பெறப்படவில்லையென நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நாடாளுமன்றத்தில் இன்று(11) தெரிவித்தார்.
நாடாளுமன்ற நிலையியல் கட்டளை 27(2) இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

நீதிபதிகள் தவிர ஏனைய தொழில் வல்லுநர்களும் தங்களது ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தக் கோரிக்கைகளை அரசாங்கம் நியாயமான முறையில் பரிசீலித்து வருகின்றது.
இவற்றில் சில கோரிக்கைகள் நியாயமானவையாக இருக்கும் தருணத்தில், ஏனையவை அரசியல் பின்னணியைக் கொண்டவையாக காணப்படுகின்றன.
எவ்வாறாயினும், வயதெல்லை அதிகரிப்பு தொடர்பாக இதுவரை எந்தவொரு உத்தியோகபூர்வமான தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார குறிப்பிட்டார்.




