மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் முதலாவது சர்வதேச போட்டியில் இலங்கை அணி வெற்றி!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி 41ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
ஜமைக்கா, கிங்ஸ்டனிலுள்ள சபீனா பார்க் மைதானத்தில் இந்தப் போட்டி நேற்று(03) இடம்பெற்றது.
இந்த போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 303 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக, குசல் மெண்டிஸ் 62 பந்துகளில் 72 ஓட்டங்களையும், பத்தும் நிஸ்ஸங்க 103 பந்துகளில் 79 ஓட்டங்களையும் பெற்று அணிக்கு வலுச் சேர்த்தனர்.
304 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி,
இலங்கை அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 49.2 ஓவர்களில் 262 ஓட்டங்களோடு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.
மேற்கிந்திய அணி சார்பாக, அணித் தலைவர் ஷாய் ஹோப் 56 ஓட்டங்களையும், ஜஸ்டின் கிரீவ்ஸ் 45 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர, 10 ஓவர்கள் பந்துவீசி 67 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணியின் வெற்றியை உறுதி செய்திருந்தார்.




